அரச ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கென ‘ஆரோக்கியம்’ நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதலாம் கட்டம் இலங்கை பொலிஸ் அதிகாரிகளை இலக்காக கொண்டு நடத்தப்படுகிறது.அரச ஊழியர்களிடையே, பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முதற்கட்ட ‘ஆரோக்கியம்’ நடமாடும் மருத்துவ முகாமில் களனி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த நடமாடும் மருத்துவ மையமானது மேற்கத்திய மருத்துவ சேவைகள், கண் மருத்துவ சேவைகள், உடல் நிறை குறியீட்டு சோதனை, மாதிரி சேகரிப்பு, ஆய்வக சேவைகள்,இரத்த அழுத்த அளவீடு, பல் மருத்துவ சேவைகள், இரத்த சர்க்கரை பரிசோதனை, கொழுப்பு சம்பந்தமான பரிசோதனை, ஆயுர்வேத மருத்துவ சேவைகள், உளவியல் ஆலோசனை சேவைகள், மருந்து நிர்வாகம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்கியது.
மருத்துவ மையம் மூலம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக அரச மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்,
‘ஆரோக்கியமான இலங்கை’ திட்டத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் வயதான மக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும்இ தொற்றா நோய்களின் சவாலை எதிர்கொள்வதும் கட்டுப்படுத்துவதும் ஆகும்









