முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முன்னிலையாகியிருந்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றிய காலத்தில், தமது பணிக்குழாமுக்காகவென தெரிவித்து நியமிக்கப்பட்ட 4 ஊழியர்களில் மூவரை, தமக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிக்கு அமர்த்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மற்றைய ஊழியர் அந்தப் பதவிக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 2,768,836.14 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, ஊழல்’ குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.









