உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன.
‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதற்கிணைவாக ஒக்டோபர் 01-05 வரை குடியிருப்பு வாரம் அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி வசதியற்ற சுமார் 4000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வகையில் வீடமைப்பு அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.
UN Habitat இலங்கை அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் இந்திய அரசின் Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்தின் அடையாள ரீதியான கையளிப்பு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் வீட்டுப் பத்திரங்கள் தாமதமான ஆயிரம் பயனாளிகளுக்கு காணிஉறுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 357 பயனாளிகளுக்கு அடையாள ரீதியில் வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
வீடு கட்டுவதற்கு நிதி வசதியற்ற ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 157 பேருக்கு அடையாள ரீதியாக காசோலைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும் ,நகர அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
இதேவேளை உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலைத் திறமைகளை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி மற்றும் வீட்டுத் திட்டமிடல் தொடர்பான படைப்புகள் உள்ளடங்கிய கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.









