நேபாளத்தில் தற்போது அமைதியற்ற நிலை நிலவிவருகிறது. கடந்த 8 ம் திகதி நேபாளத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதல்களால் 19 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அந்நாட்டில் பொதுசொத்துக்களை அழித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டம் காரணமாக நேபாள பிரதமர் கே. பீ. சர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் ஆகியோர்
பதவி விலகியுள்ளனர். அத்துடன் நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் தாக்கி வீதியில் துருத்திச்சென்றுள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேபாள ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் மற்றும் பிரதமர் கே.பீ ஒலியின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவிஇ தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அர்ஜு ராணா தியூபா ஆகியோரையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். நேபாள முன்னாள் பிரதமரின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமரின் மனைவி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேபாளம் முழுவதும் அரச கட்டிடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதோடு, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் நேபாளத்தின் மேற்கு மாவட்டத்திலுள்ள இரண்டு சிறைச்சாலைகளிலிருந்து 900 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நேபாள இராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









