19 ஆவது ஐபீஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி , கிண்ணத்தை கைப்பற்றியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களுர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது ஆரம்ப விக்கட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்குள் இழந்து தடுமாறிய நிலையில், வொஷிங்டன் சுந்தரின் நிதானமான துடுப்பாட்டம் அணிக்கு ஓரளவு கைகொடுத்தது.
வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் . எதிர்பார்ப்புமிக்க சுப்மன்கில் , ஷாய் சுதர்சன் ஆகியோர் குஜராத் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.
20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார், ஜொஸ் ஹெசல்வுட் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுகளையும், ராஷிக் சலாம் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை விராத் கோஹ்லி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி வழங்கியது.
வேங்கடேஷ் ஐயர் 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார். விராத் கோஹ்லி 42 பந்துகளில் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிவரை அழைத்துச்சென்றார்.
இறுதிப்போட்டியொன்றில் வெற்றிக்கான ஓட்டத்தை பெற வேண்டுமென்ற தனது நீண்டநாள் கனவு நிறைவேறியதாகவும், போட்டியின் முடிவில் விராத் கோஹ்லி குறிப்பிட்டிருந்தார்.
2ஆவது முறையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி தொடர்ச்சியாக செம்பியன் மகுடத்தை சூடியது
. இந்த தொடரில் சிறப்பாக செயற்பட்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வைபவ் சூரியவம்சி வளர்ந்துவரும் வீரர், அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக சிக்சர்களை பெற்றுக்கொண்ட வீரர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுக்கொண்டார்.
அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வீரருக்கு ஊதா நிற தொப்பியை காகிசோ ரபாடா தனதாக்கினார்.








