யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள அதிகளவான காணிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களின் காணி மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தக் காணிகளை விடுவிக்கும் வகையில் உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை விடுவித்து, முழுமையாக வீதிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உடனடியாக விடுவிக்க முடியாத நிலையில் காணப்படும் காணிகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அது குறித்துத் தீர்மானிக்கப்படும். விமான நிலைய விரிவாக்கத்திற்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்தக் காணிகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அதேபோல், விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. தரவுகள் கிடைத்ததும் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.









