நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி யின் பங்கேற்புடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
24 ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்ட குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் மீண்டும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், நிந்தவூர் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபா ஆகும். இதில் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன்இ திட்டத்தின் முழுமையான நிர்மாணப் பணிகள் 2027-12-31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
மேலும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது. அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி. அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம்,செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.









