பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் .
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று(02) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். 1.4 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் பாலம் 2027 செப்டம்பர் 02ம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளது.
பரந்தன்- கரச்சி- முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் வாவிக்கு அருகில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தினூடாக நாளாந்தம் 3,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. எனினும் நீண்ட காலமாக குறித்த பாலம் புனர்நிர்மாணம் செய்யப்படாதநிலையில் பாதுகாப்பற்றநிலையில் வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த பாலத்தை புதிய இருவழிப் பாலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.









