ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தே இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் தம்மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளிகளை
பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 04 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், குறித்த சந்தர்ப்பத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
பொறியியல் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.









