யாழ் வைத்தியசாலையில் 7 பேரின் மரணத்திற்கு காரணம் எலிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 32 பேர் தீவிர சிகிச்கைளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் சிலரது மாதிரிகள் லெப்டோஸ்பிரோசிஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களது மாதிரிகளின் பரிசோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதேவேளை கொழும்பு தொற்று நோயியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயகோன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.









