நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வெளியான பிரச்சினையை அடுத்து, முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
மனுமீதான விசாரணைகள் எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனு கடந்த முறை விசாரிக்கப்பட்ட போது, முன்கூட்டியே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளை உள்ளடக்கிய முதல் வினாத்தாளுக்கான மறு பரீட்சையை நடத்த வேண்டாம் என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அத்துடன் வெளியானதாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் பரீட்சையில் தோற்றிய ஒவ்வொரு மாணவருக்கும் இலவச புள்ளிகளை வழங்குமாறு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.









