அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி மு.ப 11:20 மணியளவில், எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டபோதும் 8 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்து 8,800 மைல்கள் வரை பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டதும் ,சாதாரண வெடிகுண்டுகள் மட்டுமின்றி, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்ததும் அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய மற்றும் வலிமைமிக்க போர் ஆயுதமாக B-52 ரக விமானங்கள் கருதப்படுகின்றன.
வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சமீபத்திய ஈரான் உடனான மோதல்கள் வரை பல்வேறு முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் B-52 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








