மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க சுதந்திரத்தின் 250ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்களது விஜயம் அமைந்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய மன்னர் 3ம் சார்ல்ஸ் தம்பதியினர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதற்பெண்மனி மெலானியா டிரம்ப் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு, தேநீர் அருந்தியுள்ளனர். வாஷிங்டன் டி.சி.யிலுள்ள பிரித்தானிய தூதரின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விஜயம், அமெரிக்க-பிரித்தானிய உறவுகள் நெருக்கடியில் உள்ள ஒரு காலகட்டத்தில் இடம்பெறுகிறது. ஈரான் யுத்தம் காரணமாக இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இராணுவ ஆதரவை வழங்க மறுத்தமை குறித்து , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் பிரித்தானிய மன்னர் 3ம் சார்ல்ஸ் , அரசியல் நடுநிலையை காக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில், குறித்த விஜயத்தின் மூலம் பதற்றத்தை குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணிக்கு மத்தியில் குறித்த விஜயம் அமைந்துள்ளது. அதன்காரணமாக நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை புதன்கிழமை காங்கிரஸில் இடம்பெறவுள்ள கூட்டு உரையின் போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து , மன்னர் சார்ல்ஸ் கருத்துக்களை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.









