நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கென குறைந்தளவில் பயன்படுத்தப்படும் அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் முன்வைக்கப்பட்ட, குறைந்தளவில் பயன்படுத்தப்படும் காணிகளை இனம் கண்டு அவற்றை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான கொள்கைக்கு இணங்கவே இது நடைமுறைப்படுத்தப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அமைச்சின் கீழுள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை , இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான , குறைந்தளவில் பயன்படுத்தப்படும் காணிகள் மற்றும் சொத்துக்கள் உகந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்காக தகுதியுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகள் தற்போது கோரப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கண்டி,மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை,கேகாலை மற்றும் காலி போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள பெரிய பெருந்தோட்டக் காணிகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் விடுதிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.









