இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று பல இடங்களில் இது ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு அதிவெப்பத்தால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். அதை தவிர்ப்பதற்காக அதிக நீர் அருந்துதல், நிழலான இடங்களில் ஓய்வாக இருத்தல் உள்ளிட்ட விடயங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.









