கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் செயற்பாட்டு பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடியே 61 லட்சத்து 19,425 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் செயற்பாட்டு பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியமையே வருமான அதிகரிப்பிற்குக் காரணமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அதிகூடிய வருமானம் ஏப்ரல் 10 ஆம் திகதி பதிவாகியுள்ளதாகவும் அன்றைய தினத்தில் மாத்திரம் 5 கோடி 98 இலட்சத்து 15,450 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலைகள் செயற்பாட்டு பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.









