பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் விடுவிக்கப்படாதென திறைசேரி அறிவித்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
2025.08.17 முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான விடுமுறை பெறாமல் பணிக்கு வராத அதிகாரிகளுக்கு ஓகஸ்ட் மாத சம்பளத்தை வழங்க நிதி விடுவிக்கப்படாதெனவும் திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருகைதரவேணடுமெனவும், நோய்நிலைகளுக்கு உட்பட்டிருந்தால் அது குறித்து அரச வைத்திய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பணிக்கு வருகைதராத அதிகாரிகள் , அரச சட்டதிட்டங்களின்15ம் அத்தியாயத்தின் விதிகளுக்கமைய சுயமாக தமது பதவியை கைவிட்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் கருதப்படுவார்கள் எனவும்தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.









