சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) 23வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று (12) ஆரம்பமாகிறது.
முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கிண்ணப் போட்டிகளை கனடா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2022 உலகக் கிண்ணத்தில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இம்முறை 48 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவின் 11 நகரங்கள், மெக்ஸிக்கோவின் 3 நகரங்கள் மற்றும் கனடாவின் 2 நகரங்களில் நடைபெறவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் 12ஆம் திகதி முதல் ஜூலை 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
1930ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகக் கிண்ணத் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946ஆம் ஆண்டுகளில் மட்டும் இத்தொடர் நடைபெறவில்லை.
இம்முறை கேப் வேர்ட், குரசாவோ, ஜோர்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கின்றன.
48 அணிகள் தலா நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், சிறந்த முடிவுகளைப் பெறும் 8 மூன்றாமிட அணிகளும் இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் இறுதி 16, காலிறுதி, அரையிறுதி, மூன்றாமிடப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி என்பன நடைபெறவுள்ளன.









