வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட மூன்று வெளிநாட்டு பிரஜைகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகளெனவும் சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் திசைதிருப்புவதற்காக,இ சந்தேகநபர்கள் சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
சந்தேகநபர்களின் 6 பயணப் பொதிகளுக்குள் 40 ஆயிரம் சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் பக்கெட்டுகள் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்களின் பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









