பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்களினால் பெற்றோர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக பாடசாலைகளில் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பாடசாலைகளில் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தாதவாறு அதிபர்கள் கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறித்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.









