ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம் நடப்பாண்டின் ஜனவரி 01ம் திகதி தொடக்கம் மே மாதம் 17ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒன்பது இலட்சத்தி 51 ஆயிரத்து 742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் பெருமளவானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளனர். அதற்கமைய இந்தியாவிலிருந்து குறித்த காலப்பகுதியில் இரண்டு இலட்சத்தி 21 ஆயிரத்து 953 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அதற்கடுத்ததாக பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே போன்று இம்மாதம் 01ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 75 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.









