புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைய 2026ம் ஆண்டுக்கான தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின், ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை சுபவேளையில் நடைபெற்றது.
மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன் சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து பாரம்பரிய முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி , பிறந்துள்ள தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்காக ஆசீர்வாதம் பெற்ற பின்னர், 2026ம் ஆண்டுக்கான தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வில் கலந்துகொண்டார்.
மத வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று காலை 6.55 மணிக்கு சுபவேளையில் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரின் சிரசிற்கு முறைப்படி எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாய முறைகளை முன்னெடுத்தார்.
அதன்போது மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் ஓதி ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
இதேவேளை, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்திற்காக தலதா மாளிகை வளாகத்திற்கு வருகை தந்திருந்த மக்களிடையே சென்ற ஜனாதிபதி, நலன்களைக் கேட்டறிந்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். அங்கிருந்த மக்கள் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.









