மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன்,அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு , இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இலங்கையின் உயர் நீரேந்துப் பிரதேசங்களின் சுற்றாடல் மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் இந்தப் புதிய அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுவதுடன், தேசிய நீர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, அனர்த்த அபாயக் குறைப்பு, பொருளாதார மற்றும் வலுசக்தி செயற்திறன், காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் அவற்றின் பாதிப்புகளைக் குறைத்தல், இயற்கை மூலதனக் கணக்கீடு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும்.









