துப்பாக்கியால் பெண்ணொருவரை மிரட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காணப்பட்ட துப்பாக்கியும் மீளப்பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெரியவிளான், இளவாலை பகுதியிலுள்ள ஒரு நிலம் தொடர்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட குழுவினருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவும் இடையே கடந்த 25 ம் திகதி வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், இளவாலை பொலிஸார் நிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 39 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோதல் சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குறித்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,1996 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் 44(அ) பிரிவின் கீழ் ஆயுதம் காட்டி அச்சுறுத்தல், மேலும் தண்டனைச் சட்டத்தின் 433 ஆம் பிரிவின் கீழ் சட்டவிரோத நுழைவு மற்றும் 486 ஆம் பிரிவின் கீழ் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைத்துப்பாக்கியுடன் பெண்கள் சிலருடன் தர்க்கத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.









