இந்திய உப ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
விசேட ஹெலிகொப்டர் மூலம் நுவரெலியாவை சென்றடைந்த அவரை, பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் ப்ரதீப் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடவுள்ளதோடு, நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்திய உப ஜனாதிபதி குறித்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ள இந்திய உப ஜனாதிபதி நேற்றைய நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
மேலும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் பம்பலபிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அறிவித்தார்.
இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கும், இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் உதவிகளை வழங்குமெனவும், இந்திய உப ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.









