வரலாற்றில் முதல் முறையாக எபாகஸ் மனக் கணித முறையில் 2,510 மாணவர்கள் இணைந்து 8 நிமிடங்களில் 554,500 கணக்குகளுக்கு விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்தனர்
யூசீமாஸ் எனப்படும் எபாகஸ் பயிற்சி நிறுவனம் குறித்த நிகழ்வை அலரி மாளிகையில் ஒழுங்குசெய்திருந்தது.
இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சிறந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் 2510 பேர் சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவை தலமையாகமாக கொண்டுள்ள சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரோபோ விஞ்ஞானி கார்த்திகேயன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான சுகிர்தா, வனிதா ,செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் சிறப்பு நடுவர்களும் உலக சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதிச்செய்துள்ளனர். அவர்களுடன் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் நடுவர்கள் 15 பேரும் இணைந்து உலக சாதனை படைக்கும் முயற்சியைக் கண்காணித்தனர்.
சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் 2,3,4இ எண்கள் கொண்ட கூட்டல், பெருக்கல்,கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு விடையளித்தனர். கணக்குகள் 2 முதல் 10 அடுக்குகள் வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் நடுவர்களினால் வழங்கப்பட்டன.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரொபோ விஞ்ஞானி கார்த்திகேயன் குறிப்பிடுகையில் உலக வரலாற்றில் எபாகஸ் மனக் கணித முறையில் மிகவும் கடினமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு 8 நிமிடங்களில் தீர்வு எழுதியது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா, பொதுச் செயலாளர் ருக்சான், உதவிச்செயலாளர் கதிரவன் இன்பராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யூசிமாஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளைக்கான தலைமை நிர்வாக அதிகாரி சிவசங்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சித்ரா இளமைநாதன் ஆகியோர் நிகழ்வைத் தலைமையேற்று நடத்தினர்.
சோழன் உலக சாதனை படைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..









