இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள், தனியார் துறை நீண்ட தூர பஸ் வண்டிகளையும் ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் குறித்த ஒன்றிணைந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
அதற்கமைய கொழும்பு – சிலாபம், கொழும்பு – புத்தளம், கொழும்பு – ஆனையிறவு, கொழும்பு – எலுவன்குளம், கொழும்பு – கல்பிட்டி, நீர்கொழும்பு – கல்பிட்டி, கொழும்பு – மன்னார், கொழும்பு – தலைமன்னார், கொழும்பு – குளியப்பிட்டி, கொழும்பு – அனுராதபுரம், கொழும்பு – வவுனியா, கொழும்பு – கிளிநொச்சி, கொழும்பு – யாழ்ப்பாணம், கொழும்பு – காங்கேசன்துறை, கொழும்பு – காரைநகர், கொழும்பு – துணுக்காய் மற்றும் கொழும்பு – நிக்கவெரட்டிய ஆகிய மார்க்கங்களில் ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து குறித்த சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நான்கரை மணி நேர பயணத்தின் பின்னர் பஸ் சாரதிகளின் ஓய்வுக்காக பஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பஸ்வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவகங்களில் சுகாதாரமான உணவு மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்கப்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.









