முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 29 ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் அவரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவரின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் உரிய காணிப் பதிவு அலுவலகங்கள் மற்றும் அவர் வசிக்கும் வீடுகளின் பிரதேச செயலகங்களிலிருந்து பெறப்பட்டு வருவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கொரிய நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய ஒப்பந்தமொன்றை வழங்கி அரசாங்கம் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் ராஜித சேனாரத்ன ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 29 ம் திகதி ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ‘பிரகடன உத்தரவை’ பிறப்பித்துள்ளது.









