முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா நிகழ்வுக்காக லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு இன்று அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பிணை மனு தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விசாரணை முழுமையடையாததால், பிரதிவாதியை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்ததுடன் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார். எனினும் அவரை பிணையில் விடுதலை செய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானங்களும் வெளியிடப்படவில்லை.









