ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களுக்கான பருவகாலமென்பதால் தற்போது நாடுமுழுவதும் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களை உட்கொண்டதன் பின்னர் அவற்றின் தோல் பகுதிகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு நோய் பெருகும் அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா அதுகுறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை பொது இடங்களிலும், முறையற்று வேறு இடங்களிலும் வீசி எறிவதால் அவற்றில் நீர் நிரம்பி நுளம்பு பெருகும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









