11வது தேசிய விபத்துத் தடுப்பு வார செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 10ம் திகதி வரை விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய இன்று (ஜூலை 06): வீதி விபத்துக்களைத் தடுக்கும் தினம்
நாளை (ஜூலை 07): வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 08: வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 09: நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 10: பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
என பெயரிடப்பட்டுள்ளன.
இந்த வாரத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், ஆபத்தான இடங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைச் செயல்பாடுகள் மற்றும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வித் துறை, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுகாதாரச் சேவைக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.









