சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள் , பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் வெளியிடப்பட்டுள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய சந்தேக நபரொருவர் கைதுசெய்யும்போது, கருத்து அல்லது அறிக்கையின் ஊடாக யுத்த நடைமுறைகளை தூண்டுதல், பாகுபாடு, பகைமை மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையான கருத்துக்கள், தேசிய, இன , மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே கைதுசெய்யப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கைதுசெய்யப்படும்பட்சத்தில், அது தொடர்பில் பொலிஸ் அதிகாரியினால் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டு, எழுத்துமூல அனுமதி பெறப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.









