2025 ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி தலைமையில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். எனினும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் உரிய பரீட்சை மையங்களுக்கு செல்ல வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும். இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும். இரண்டாவது வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு முடிவடையும்.
அதன் பிறகு அரை மணி நேர இடைவேளைக்கு பின்னர் முதல் வினாத்தாள் காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.
தேர்வின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.









