இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் பதவியேற்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்திய தலைநகர் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதோடு 30 அமைச்சர்களும் பதவிபிரமாணம் மேற்கொண்டனர்.
இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸு, சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அஹமது அபிப் ,பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ,மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களும் ,நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட 8000 க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.









