எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாதென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து முறையாக நிர்வகிக்கும் நோக்குடன் QR குறியீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் கணிசமான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருகின்ற போதிலும், அரசாங்கம் பெருமளவில் மானியங்களை வழங்கியே பெரும் சுமையிலிருந்து மக்களை பாதுகாத்து வருகிறது.
எனினும் இந்த மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேகமாகத் தீர்ந்து வருவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா எச்சரித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்குவதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது.
இந்த நிதி நிவாரணமானது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பேணப்பட்டதுடன் இம்மாதத்திலும் தொடரும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.









