கைரேகை வருகைப் பதிவு முறையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் வேறு தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுமாறு தபால் ஊழியர்கள் தொழிற்சங்கத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கைரேகை வருகைப் பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளை தபால் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும், நீண்டகால வேலைநிறுத்தங்கள் கருவூலத்திற்கு பாரமாக அமைந்து, எதிர்கால சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியங்களை பாதிக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது. .
எனினும் கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை. அவை பரிசீலிக்கப்பட மாட்டாது. கைரேகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில குழுக்கள் பல்வேறு அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த முறையை ஏற்காதவர்கள் வேறு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளலாம் என அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி முதல் தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கூடுதல் நேர ஊதிய மாற்றங்கள் மற்றும் கைரேகை வருகைப் பதிவு முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளடங்கும். இவ்வேலைநிறுத்தம் நாடு முழுவதும் முக்கிய சேவைகளை பாதித்துள்ளது.
தபால் மாஸ்டர் ஜெனரல் ருவான் சத்குமார ,கைரேகை முறையை நியாயப்படுத்தி தணிக்கைகளில் வருகைப் பதிவு இன்றி சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியம் கோரப்பட்டதாக வெளிப்படுத்தினார். தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என அவர் விமர்சித்தார்.
இதனிடையே அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸவின் முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.









