சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) பயணிக்கவுள்ளார். சுமார் 9 ஆண்டுகளில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ட்ரம்ப் சீனாவுக்கு பயணிக்கவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளுக்கு இடையிலான உறவில் இது ஒரு தீர்மானமிக்க தருணமென சுட்டிக்காட்டப்படடுள்ளது.
கடந்த 2025 ஒக்டோபர் மாதம் தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இருவருக்குமிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்தோடு 2025 ஜனவரி 20 ஆம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் யத்தம் மற்றும் உலகளாவிய எரிபொருள் பிரச்சினை மற்றும் தாய்வான் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









