சிறைக்கைதிகளின் உற்பத்திகளை உள்ளடக்கிய “சிறசர சில்ப 2025″ பத்தரமுல்லை தியத வளாகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று 15ம் திகதி முதல் 17 ம் திகதி வரை 3 தினங்களுக்கு காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பத்தரமுல்லை தியத வளாகத்தில்
கண்காட்சி நடைபெறும்.
மறுவாழ்வு செயற்பாட்டின் விசேட அங்கமான சிறைச்சாலைகளில் தங்கியுள்ளவர்களின் திறமைகள், ஆளுமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடன் சிறைக் கைதிகளின் படைப்புக்களை உள்ளடக்கியதாக ‘ சிரசற சில்ப 2025 ” கைவினை கண்காட்சி
ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு கண்காட்சி ஆரம்பமானது.
நாட்டின் 28 சிறைச்சாலைக் கைதிகளின் கலை நய கைவினை படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைக்கைதிகளின் சீர்திருத்த காலப்பகுதியில் அவர்களின் திறமைக்கமைய விவசாயம், தும்பு கைத்தொழில், தச்சு, கொல்லர், சவர்க்கார பிரிவு, வெதுப்பகம், அச்சுக் கல் பிரிவு, நெசவு பிரிவு, தையல் பிரிவு மற்றும் காலணி பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளில் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் கண்காட்சிப்படுத்தப்படும்.
சிறைக் கைதிகளினால் தயாரிக்கப்பட்ட கதிரை, மேசை, அலமாரி, கட்டில், புத்தக இராக்கை, கண்ணாடிமேசை, சுவர் இறாக்கை மரப் பொருட்கள், ரேக்குகள், கை மண்வெட்டிகள், கை கோடாரிகள், கத்திகள் மற்றும் பிற கொல்லர் பொருட்கள், படுக்கை விரிப்புகள், துணி பென்சில் பெட்டிகள், துணி கம்பளங்கள், கை துண்டுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பிற தையல் படைப்புகள், கரிம உரங்கள், அரிசி, இனிப்புகள், சோளம், காய்கறிகள் மற்றும் மூலிகைகள், நுளம்பு வலைகள், புடவைகள், சுவர் மற்றும் மேசை விளக்குகள் போன்ற பொருட்களை இங்கு கொள்வனவு செய்ய முடியும்.









