இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின்பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம்.ராமேஷ்வரன் ஆகியோர் தலைமையில் தேசிய சபை கூடியது.
தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர், தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் இதனை அறிவித்தார். கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா ஐந்து சபைகளைக் கைப்பற்றியது. எனவே இம்முறையும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வியூகம் வகுக்கப்படுகின்றது.
காங்கிரஸின் தனித்துவமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது. கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை. அது பற்றியும் பரிசீலிக்கப்படுகின்றது.
இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும் என்ற தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்டது. இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். நியமிக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை தேசிய சபைக்கு முன்வைக்கும். அதற்கமைய மறுசீரமைப்பு இடம்பெறும்.
காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பது வரவேற்கதக்க விடயமாகும். இப்படியான அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியுடன் தனிவீடு அவசியம். மாடி வீடு திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் அறிவித்தார்.









