இலங்கைத் தமிழரசுக் கட்சி நாளைய தினம் முன்னெடுக்கவிருந்த கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபருக்காக நீதிகோரி நாளைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஹர்த்தால் நடவடிக்கை திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி மேற்கொள்ளப்படுமென தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்









